Wednesday, December 30, 2009

புத்தாண்டே வருக !

அன்பிற்கினிய நண்பர்களுக்கும்
வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
- அன்புடன்....
சி . ராஜபாண்டியன்....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


Sunday, December 27, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிறு குழந்தையின் சிரிப்பு ஒலியில்உலகம் அதிர..

இளைஞர்கள் கனவுகள் நிறைவேற

ஏழை எளியவர்களின் வறுமை ஓழிய

உலகில் அமைதி நிகழ்ந்து

இயற்கையின் கோபம் தணிந்து

பூக்கள் மலர

இனிய புத்தாண்டு தொடங்கட்டும்......

Thursday, December 17, 2009

“பேராண்மை”




கத்திரிக்காய் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்நேரத்தில் இயற்கை வேளாண்மையின் மேன்மையையும், அவசியத்தையும் வலியுறுத்தி வசனங்கள் வருவதற்காகவே இம்மண்ணை நேசிக்கும் அனைவரின் சார்பாக நாம் பேராண்மை திரைப்படத்துக்கும் அதன் இயக்குநர் ஜனநாதனுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது, இம்மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. அதை இன்னும் முறைப்படுத்தி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரிவரக் கிடைக்குமாறு செய்வது நல்ல அரசாங்கத்தின் கடமை.

இட ஒதுக்கீடு என்பதே இன்னும் முழுமையாக மக்களுக்கு போய்ச் சேராத நிலையில், இடஒதுக்கீடால் பயனடைந்த சிலரின் சிறுவளர்ச்சியைக்கூட இந்துத்துவ மனோபாவம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கிறது என்பதை “பேராண்மை” படத்தில் இயக்குனர் தன்னால் இயன்ற அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடி மக்களுக்கான அரசியலை அந்த மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபட வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஜனநாதனைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

பழங்குடி மக்களிடமிருந்து ஒருவன் படித்து மேல்நிலைக்கு வருவதை, சராசரி “இந்துத்துவ மனநிலை” ஏற்க மறுப்பதும் அதைக் கதாநாயகன் எதிர்கொள்வதும்தான் கதையின் முக்கிய அம்சம். சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் விளிம்பு நிலையிலிருக்கும் கதாநாயகன், இம்மண்ணின் விவசாய நிலம் மலடாக்கப்படுதல், அந்நிய ஆக்கிரமிப்பு, அரசியல், பொருளாதாரச் சீர்த்திருத்தம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கும் காட்சிகள், சினிமா இரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் புதிதுதான். ஏழைகளுக்காகவும், சேரி மக்களுக்காகவும் பாடுபடுவது போல எம்.ஜி.ஆர். அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால் அத்திரைப்படங்களில் அவர் ஒரு பணக்காரராகவும், உயர்சாதியினராகவும் இருந்து, அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடும் கடவுளாக காட்டப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் அரசியலை எசமான விசுவாசத்தோடு இருக்க வைத்ததற்கு இத்தகையத் திரைப்படப் போக்குகள் பெரிதும் உதவின. ஆனால் உண்மையான ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஒடுக்கப்பட்டோரின் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்கிற சரியான பார்வையைத் திரையுலகில் முதலில் கொண்டுவந்தவர் என்கிற பெருமை இயக்குநர் ஜனநாதனையே சாரும்.

பெண்களை ஆயுதம் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகவும், அதீதத் துணிச்சல்காரர்களாகவும், ஆணுக்கு எந்த ஒரு புள்ளியிலும் சளைக்காதவர்களாகவும் சர்வசாதரணமாகத் திரையில் கையாண்டிருப்பது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. போர்க்காட்சியில் கதாநாயகன் ‘நான் இறந்துட்டா நீங்க போரை நடத்திப் பொதுவுடமை சமூகத்தை நிலைநாட்டுங்கள்’ என்று சொல்லும் காட்சியில் சமூக மாற்றத்துக்கான அனைத்துச் செய்திகளையும் இந்த ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற இயக்குநரின் ஆசையையும், தவிப்பையும் உணர்கிறோம்.

மனிதர்களின் சாதியையும், மதத்தையும் சுட்டிக் காட்டியே வாழ்பவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் என்பதைக் கதாநாயகனுக்கு மேலதிகாரியாக வரும் கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்டோர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டினால்தான் தனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்று அறிவிற்குப் புறம்பாக புலம்பிக் கொண்டே காலம் தள்ளும் ஒடுக்குஞ் சாதியினருக்கு சரியான பாடத்தை அந்த கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனிடம் பாடம் கற்கும் மாணவிகளில் எல்லோரும் அவனது பிறப்பை வைத்து அவனை வெறுத்து ஒதுக்க, ஒரே ஒரு இசுலாமியப் பெண் மட்டும் அவனது அறிவையும், ஆற்றலையும் கண்டு வியந்து அவனை விரும்புவது போல் காட்சியமைத்திருப்பது, சிறுபான்மைச் சமூகம், இந்துத்துவ மனநிலையிலிருந்து சற்று விலகியிருப்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம். கதாநாயகன் மாணவிகளிடம் ‘நான் ஆங்கிலம் பேசினா என் மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காது’ என்று சொல்லும் காட்சியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிக்க மனநிலைக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

“கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கர் அவர்களின் கொள்கை முழக்கங்களை அச்சிட்டே இப்படத்தின் தொடக்க விழா நடந்தது. ஆனால் மனுதர்மத்தைப் பற்றிய அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைக் கூட என்னால் இப்படத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று ஜனநாதன் அவர்கள் தொலைக்காட்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனநாதன் அவர்களே! சட்டக் கல்வி படிக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களே இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் படமோ, பெயரோ கல்லூரியில் இருக்கக் கூடாது என்ற இந்துத்துவத் தீண்டாமை மன நிலையில் இருக்கும்போது, அந்த இந்துத்துவ மனநிலையை வளர்த்தெடுக்க உதவும் இந்த இந்தியத் தேசிய அரசாங்கம், எப்படி அம்பேத்கரின் மனுதர்ம விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் ?.

மார்க்சையும், ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் படித்து வளரும் கதாநாயகன், தனது மேலதிகாரியின் வக்கிரமான பேச்சுக்கும், கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் அடங்கிப்போவது போல் படம் முழுக்கக் காண்பித்திருப்பது நமக்கு நெருடலாக உள்ளது. அடங்கிப் போகவா மார்க்சும், பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்? மார்க்சிய சிந்தனை கொண்ட கதாநாயகனிடமிருந்து சின்ன பதிலடி கூட இல்லாமல் காட்சிகள் இருப்பது ஒரு குறைதான்.

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்கள், மனுதர்ம விமர்சனம் போன்ற அனைத்தும் தணிக்கைக் குழுவினரால் வெட்டியெறியப்பட்டு விட்டது என்பது வேதனைக்குரிய செய்தி. தமிழ்நாட்டிற்கென்று தமிழ்த் திரைக்கென்று தனியாகத், தணிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழரல்லாதவர்களின் கையில் இருக்கக் கூடாது.

தணிக்கைக் குழுவினர் சில வசனங்களை வெட்டியெறிந்ததைப் போலவே, தணிக்கை குழு அனுமதித்த சில வசனங்களை நாம் வெட்டியெறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆபாச இரட்டைப் பொருள் வசனங்களை மட்டும் நாம் சொல்லவில்லை. இதோ:

“இந்திய தேசத்தைக் காப்பேன்!

என் உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைக் காப்பேன் !!”

ஆண்டாண்டு காலமாக, இந்த “இந்தியத் தேசம்” நம் மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருப்பது போதாது என்று நாம் வேறு விரும்பி உயிரைக் கொடுக்க வேண்டுமாம்! (ஜனநாதன் அவர்களின் இக்கட்டான சூழ்நிலை நமக்குப் புரிகிறது). இந்த வசனங்களை மட்டும் நாம் தணிக்கை செய்து விட்டுப் பார்த்தால் “பேராண்மை” பேசப்பட வேண்டிய பேருண்மை.

(சமுக நீதித் தமிழ்த் தேசம் நவம்பர் 2009 இதழில் வெளிவந்த விமர்சனம்)



Saturday, December 12, 2009

கண்ணீர் அஞ்சலி !



கள்ளங் கபடமற்ற
சின்னஞ் சிறுசுகளே -
எதை உணர்த்துவதற்காக
எம்மை விட்டு பிரிந்தீர்களோ ,
அதை உணர்ந்து
மாற்றத்தை கொண்டு வருவதே
உங்களுக்கு செய்யும்
உண்மை அஞ்சலி .

Thursday, December 3, 2009

பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; மொபைலில் பேசியபடியே வந்த வேன் டிரைவர் !












நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி ‌வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்‌நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.


ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த ‌வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். ‌மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் ‌என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.


நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஆத்தூரில் மற்‌றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 ‌பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.


விபத்தில் இறந்தவர்கள் விவரம் : விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வந்துள்ளது. கார்த்திகேயன் மகன்கள் ; ஜெயப்பிரகாஷ் ( 1 ம் வகுப்பு ) , ஜெயசூர்யா ( யு.கே.ஜி.,), அஜய் ( யு.கே.ஜி.,), விஜிலா ( யு.கே.ஜி.,), ஹரிகரன் ( எல்.கே.ஜி.,), ஈஸ்வரி ( 2 ம் வகுப்பு ), அபிநயா , மகாலட்சுமி . ஆசிரியை பெயர் சுகந்தி இவர் கட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர்.


மாவட்ட ‌கலெக்டர் ஆறுதல் : சம்பவம் நடந்த இடத்திற்கு கலெக்டர் முனியநாதன், மாவட்ட எஸ். பி., ‌மகேஸ்வரன், வேதாரண்யம் எம்.எல்.ஏ., வேதரத்தினம் மற்றும் அதிகாரிகள் சென்றனர். விபத்து நடந்தது குறித்து விசாரித்தனர். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.


தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.

- தினமலர் (03.12.2009)

Tuesday, December 1, 2009

உயிர்








உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .