Friday, September 17, 2010

கடும் எதிர்ப்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு: முறியடிக்கப்படுமா ராஜபக்ஷேக்களின் ராஜதந்திரம்?

நெருப்பை காகிதத்தால் மூடி மறைப்-பதைப் போல சிங்கள அரசு தனது போர்க்குற்றத்தை மறைக்க என்னென்னமோ செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்திய உதவியுடன் சர்வதேச இந்திய பட விழாவை கொழும்பில் நடத்தி தனது ரத்தக் கறையை ஜிகினாவால் மறைக்க முயன்றது இலங்கை. ஆனால், தமிழகத்திலிருந்து எழுந்த வலிமையான எதிர்ப்பு அலைகளால் அந்த படவிழாவை தமிழ், இந்தி நட்சத்திரங்கள் புறக்கணிக்க... தோல்வியில் முடிந்தது விழா. இதையடுத்து இப்போது கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த திட்ட-மிட்டிருக்கிறது சிங்கள அரசு. கருணா, கே.பி. போன்ற தமிழர்களை(?) தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு தமிழ் என்னும் முகத்துடன் சிங்கள அரசு நடத்த திட்டமிடும் இந்த மாநாட்டுக்கும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஒன்றுகூடி ஒட்டு மொத்த தமிழுலகத்தின் எதிர்ப்பை வலிமையாக தெரிவித்துள்ளனர். ‘‘தனது கோர முகத்துக்கு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் தமிழ் நேச அரிதாரம் பூசிக் காட்ட இலங்கை கடுமையாக முயற்சிக்கிறது. இதை முறியடித்து உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்த கூட்டமைப்பு.இப்படி எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில்... சிங்கள அரசின் திட்டமான இந்த மாநாட்டில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாக ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியைப் பற்றி செய்திகள் சிறகடித்துவந்தன. ஆனால், ‘கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் அதில் கலந்துகொள்ள வேண்டாம்’ என திடீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிவத்தம்பி.இதுபற்றியெல்லாம் ஈழத் தமிழ் எழுத்தாளரும், கடந்த அறுபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் படைப்பிலக்கிய முன்னோடியுமான எஸ்பொ என்று சுருக்கமாக அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரையிடம் பேசினோம்.‘‘இலங்கையில் தமிழர்களே இருக்கக் கூடாது என வெளிப்படையாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ராஜபக்ஷே சகோதரர்களின் ஆலோசனையின்படிதான் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த தடம் எதுவும் தென்படக் கூடாது என்பதற்-காகவே நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா, ஆடி விழா, எழுத்தாளர் மாநாடு போன்றவற்றை நடத்தி... இலங்கையில் தமிழர்கள் சகஜமாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உலக அரங்கில் உருவாக்கப்பார்க்கிறார்கள் ராஜபக்ஷே சகோதரர்கள். இந்தத் தோற்றத்தை உருவாக்க மகத்தான சாயமாக எழுத்தாளர் மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.
எனக்கு கொழும்பிலிருந்து கிடைத்த நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால்... சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான விடயங்களை பிரசுரிக்கவேண்டாம் என்று அனைத்து தினசரிகளையும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஆக, இந்த மாநாடு தனக்கு சாதகமானது என சிங்களனே நினைக்கிறான் என்றால், இதன் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது தெளிவாகிறது. முள்ளிவாய்க்கால் படு-கொலைக்கு சில தினங்கள் முன்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடேசன், லண்டன் பாலசுப்ரமணியன் ஆகியோர் ராஜபக்ஷே சகோதரர்களை சந்தித்து விருந்துண்டு மகிழ்ந்தவர்கள். அவர்கள்தான் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டே தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள்தான் சிங்களனுக்கு சாதகமாக கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பது வெளிப்படையாகிவிட்டது’’ என்ற எஸ்பொவிடம்... ‘‘சிவத்தம்பி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?’’ என்று கேட்டோம்.‘‘சமீபகாலமாக சிவத்தம்பி முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நடந்த செம்மொழி மாநாட்டில் கூட முதலில் சிவத்தம்பி பங்கேற்கப்போவதில்லை என்ற நிலையில் இருந்தார். பின் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.அதேபோலத்தான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு விடயத்திலும் இப்போது முரணான நிலையை மேற்கொண்டிருக்கிறார். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள், ‘சிவத்தம்பி முன்னிலையில்தான் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டமே நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் சிவத்தம்பி திடீரென மாநாட்டை எதிர்க்கிறார். இந்த விடயத்தில் வரவேற்கத்தகுந்த அவருடைய மன மாற்றத்துக்கு காரணம் தெரியவில்லை.இந்த மாநாடு நடக்கவே கூடாது என்பது எங்கள் எண்ணம் அல்ல. ஆனால், தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷே சகோதரர்கள் உலக அரங்கில் தங்கள் போர்க்குற்றத்தை மறைத்துக்கொள்ள கேடயமாக கொழும்பில் இந்த மாநாடு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்’’ என விரிவாகப் பேசினார் எஸ்பொ.‘பேரழிவு ஆயுதங்களை தமிழனுக்கு எதிராக தூக்கிய ராஜபக்ஷேக்கள், இன்று தமிழனின் பேனாவையே தமிழனுக்கு எதிராக தூக்கத் துணிந்துவிட்டனர். கொழும்பின் கொழுப்பை அடக்க, இந்த மாநாட்டுக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்படுவது அவசியம்’ என்பதே மிகப் பெரும்பான்மையான தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது

பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் கூறிய சில கருத்துக்கள்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த.......

காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம், மத்திய கூடுதல் காவற்படை, மாநில காவல் படை ஆகியவற்றை எதிர்த்து அம்மாநில மக்கள், குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் கல்லெறிந்து நடத்திவரும் வன்முறையும், அதனை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுக்க முற்படும் பாதுகாப்புப் படைகளின் ‘ஒழுங்கு’ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டால் மட்டுமே அங்கு அமைதி ஏற்படும் என்பதை காஷ்மீரில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை நுணுக்கமாக அவதானித்துவரும் எவரும் ஒப்புக் கொள்வர்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்தரை மணி நேரம் விவாதித்தப் பிறகும் நமது தலைவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு, கல்லெறியும் வன்முறையாளர்கள் கூறும் ஒரே காரணம்: காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தையும் மத்திய கூடுதல் காவற்படைகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை காஷ்மீரிகளிடையே பேட்டி கண்ட ஊடகங்கள் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின.

“எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமில்லை. சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் காவற்படைகளும், இராணுவத்தினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அத்துமீறுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர். எங்களது பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்குத் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இராணுவத்தாலும், மத்திய கூடுதல் காவற்படைகளாலும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளத” என்று கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுபவர்கள் காஷ்மீரிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலுள்ள மற்ற மாநிலத்தவரும், அயல் நாட்டவர்களும்தான். பாதுகாப்புப் படையினரால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீநகரில் வாழுந்து வரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரும் அவருடைய மனைவியும் கூறினர். இதையெல்லாம் இந்தியாவிலுள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவேதான் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து அவர்கள் கல் வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒடுக்க முற்பட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும், தங்கள் சுதந்தரத்தை, அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கும் அந்தப் படைகள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA). காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தபோது, அவர்களை ஒடுக்க, இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமளிக்க பிரகடனம் செய்யப்பட்ட இச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

தாங்கள் சந்தேகப்படும் எவரையும் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தவும், எந்த வீட்டிற்குள் நுழைந்தும் எந்த நேரமும் சோதனையிடவும், கைது செய்யவும், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் விசாரணையில் வைக்கவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.

இச்சட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு இராணுவமும் காவற்படையும் எப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு உதாரணம்தான், சோபியானில் இரண்டு பெண்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்ட (இந்த உண்மையை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மறைத்தது) சம்பவமாகும். இதைப்போல் பல நூறு சம்பவங்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. ஆனால் அவைகள் மறைக்கப்படுகின்றன அல்லது அரசால் மறுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு நிரந்தரமான அடக்குமுறைக்கு ஒட்டுமொத்த காஷ்மீரும் உட்படுத்தப்பட்டுள்ளது எனும் உண்மையை இந்தியர்களாகிய நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசுகள் தங்கள் தவறுதலான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

பயங்கரவாதம், தீவிரவாதம், ஊடுறுவல் (பத்திரிக்கைகளில் வெளியான மாகில் படுகொலை) ஆகிய சொற்கள் எல்லாம் அரசுகளின் ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மறைக்கவும், தொடரவும் வசதியாக பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது.

எனவே, அவர்களின் இரண்டாவது கோரிக்கை, ஆயுத படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை பறித்து, அவர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தும் சட்டங்களுக்கு நிரந்தரமாக இடமளிப்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்?

சந்தேகத்தின் பெயரால் இராணுவத்தினரால் ‘அழைத்துச் செல்லப்பட்ட’ திரும்பிவராதவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள் என்று இந்தியா வந்த ஐ.நா.வின் மனிதாபி விவகாரங்களுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறினார் அல்லவா? அவர்கள் கொடுத்த புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினாரே. அதனை மறந்துவிடக் கூடாது.

பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுவச் செய்யப்படும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் காஷ்மீரில் கண்ணில்படும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற மனப்போக்கில் அரசப்படைகள் செயல்படுதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

இராணுவத்தினருக்கும், இதர ஆயுதப் படைகளுக்கும் எதிராக இப்போது காட்டப்படும் கல்வீச்சு எதிர்ப்பின் காரணத்தை மத்திய அரசு உணர்ந்தும், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்றும் கூறுவது அம்மக்களை மேலும் அந்நியப்படுத்திவிடும்.

இப்போதே அவர்கள் மிக அதிகமான அந்நியப்பட்டுவிட்டார்கள். அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வந்த காரணத்தில் உருவான விளைவு இது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மட்டும் பேசினால் தவறாகும், அம்மக்களும் எம்மக்களே என்பதை தனது நடவடிக்கையின் மூலம் அரசு நிரூபிக்க வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தேவையில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பிரதிநிதிகளாகவும், குரல்களாகவும் விளங்கும் தலைவர்களோடும், இயக்கங்களோடும் மத்திய அரசு பேச வேண்டும். இதைத்தான் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வென்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் தாரிகாமி கூறுகிறார்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையாக விரும்பினால், அது செய்ய வேண்டியது, அங்கு மக்கள் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய கூடுதல் காவற்படைகளை திரும்பப் பெற வேண்டும், எல்லையைத் தவிர மற்றப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக சூழலிற்கும், வாழ்விற்கும் எதிரான ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதைச் செய்யாமல், ஒரு கோடி மக்கள் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இலட்சம் இராணுவத்தினரையும், மேலும் 2 இலட்சம் ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண்போம் என்று பிரதமர் கூறுவாரேயானால், அது மற்ற இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

ஏனெனில், காஷ்மீரைப் பொறுத்தவரை அமைதிக்கு எதிரி வன்முறை மட்டுமல்ல, ஆயுதப் படைகளும்தான் என்பதை பிரதமர் உணர்ந்து செயலாற்ற வேண்டும்