Monday, January 20, 2014

                         






                                            


               பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்(சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள். அதற்கு அடுத்தபடியாக, உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நமது பிச்சாவரம் காடுகள்தாம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளருகின்றன. இவற்றின் தண்டுகளிலும், கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக, உயிர்க்காற்றை உறிஞ்சுகின்றன. நீர்மட்டம் உயரும்போது, சிறிய குழல்களைவெளியே நீட்டி, காற்றை உறிஞ்சுகின்றன. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக் கொள்கின்றன. இங்கு விளைந்துள்ள செடிகள் சுனாமி வந்தாலும் அதனை மேலும் செல்லவிடாமல் தடுத்து விடும் தன்மை பெற்றது.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.
உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.