Saturday, August 14, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடும்போதேல்லாம் குறிப்பிட்ட பிரபலமடைந்த தலைவர்களின் புகழைப்பாடிக்கொண்டிருக்கின்றோம் .சாதாரணமாக நமக்கு தெரிந்த சுதந்திர போராட்ட வீரர்கள் என்றால் அதிகபட்சமாக ஒரு ஐம்பது தியாகிகளைப்பற்றி கூறமுடியும். ஆனால் சுதந்திரத்திற்காக எத்தனை ஆயிரம் மக்கள் தனது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள் . அவர்களின் பெயர்கள் கூட நமக்கு தெரியாதே . தனது பெயரைக்கூட சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம் . அந்த அடிப்படையில் இன்று திரு .பி. கக்கன் அவர்களிப்பற்றி சில தகவல்கள் ...

இளமைக்காலம்


கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.

இந்திய விடுதலை போராட்டம்


கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி

கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

நற்பணிகள்

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

அரசு மருத்துவமனையில் இடமில்லாமல்....

மேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினார். அந் நோயர் வேறு யாருமல்ல. ‌தியாகி கக்கனே!

தியாகி கக்கனைப்பற்றிய தகவல்களோடு இனிய சுதந்திர தின வாழ்த்துக்களையும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் .