Friday, September 17, 2010

கடும் எதிர்ப்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு: முறியடிக்கப்படுமா ராஜபக்ஷேக்களின் ராஜதந்திரம்?

நெருப்பை காகிதத்தால் மூடி மறைப்-பதைப் போல சிங்கள அரசு தனது போர்க்குற்றத்தை மறைக்க என்னென்னமோ செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்திய உதவியுடன் சர்வதேச இந்திய பட விழாவை கொழும்பில் நடத்தி தனது ரத்தக் கறையை ஜிகினாவால் மறைக்க முயன்றது இலங்கை. ஆனால், தமிழகத்திலிருந்து எழுந்த வலிமையான எதிர்ப்பு அலைகளால் அந்த படவிழாவை தமிழ், இந்தி நட்சத்திரங்கள் புறக்கணிக்க... தோல்வியில் முடிந்தது விழா. இதையடுத்து இப்போது கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த திட்ட-மிட்டிருக்கிறது சிங்கள அரசு. கருணா, கே.பி. போன்ற தமிழர்களை(?) தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு தமிழ் என்னும் முகத்துடன் சிங்கள அரசு நடத்த திட்டமிடும் இந்த மாநாட்டுக்கும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஒன்றுகூடி ஒட்டு மொத்த தமிழுலகத்தின் எதிர்ப்பை வலிமையாக தெரிவித்துள்ளனர். ‘‘தனது கோர முகத்துக்கு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் தமிழ் நேச அரிதாரம் பூசிக் காட்ட இலங்கை கடுமையாக முயற்சிக்கிறது. இதை முறியடித்து உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்த கூட்டமைப்பு.இப்படி எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில்... சிங்கள அரசின் திட்டமான இந்த மாநாட்டில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாக ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியைப் பற்றி செய்திகள் சிறகடித்துவந்தன. ஆனால், ‘கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் அதில் கலந்துகொள்ள வேண்டாம்’ என திடீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிவத்தம்பி.இதுபற்றியெல்லாம் ஈழத் தமிழ் எழுத்தாளரும், கடந்த அறுபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் படைப்பிலக்கிய முன்னோடியுமான எஸ்பொ என்று சுருக்கமாக அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரையிடம் பேசினோம்.‘‘இலங்கையில் தமிழர்களே இருக்கக் கூடாது என வெளிப்படையாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ராஜபக்ஷே சகோதரர்களின் ஆலோசனையின்படிதான் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த தடம் எதுவும் தென்படக் கூடாது என்பதற்-காகவே நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா, ஆடி விழா, எழுத்தாளர் மாநாடு போன்றவற்றை நடத்தி... இலங்கையில் தமிழர்கள் சகஜமாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உலக அரங்கில் உருவாக்கப்பார்க்கிறார்கள் ராஜபக்ஷே சகோதரர்கள். இந்தத் தோற்றத்தை உருவாக்க மகத்தான சாயமாக எழுத்தாளர் மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.
எனக்கு கொழும்பிலிருந்து கிடைத்த நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால்... சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான விடயங்களை பிரசுரிக்கவேண்டாம் என்று அனைத்து தினசரிகளையும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஆக, இந்த மாநாடு தனக்கு சாதகமானது என சிங்களனே நினைக்கிறான் என்றால், இதன் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது தெளிவாகிறது. முள்ளிவாய்க்கால் படு-கொலைக்கு சில தினங்கள் முன்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடேசன், லண்டன் பாலசுப்ரமணியன் ஆகியோர் ராஜபக்ஷே சகோதரர்களை சந்தித்து விருந்துண்டு மகிழ்ந்தவர்கள். அவர்கள்தான் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டே தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள்தான் சிங்களனுக்கு சாதகமாக கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பது வெளிப்படையாகிவிட்டது’’ என்ற எஸ்பொவிடம்... ‘‘சிவத்தம்பி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?’’ என்று கேட்டோம்.‘‘சமீபகாலமாக சிவத்தம்பி முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நடந்த செம்மொழி மாநாட்டில் கூட முதலில் சிவத்தம்பி பங்கேற்கப்போவதில்லை என்ற நிலையில் இருந்தார். பின் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.அதேபோலத்தான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு விடயத்திலும் இப்போது முரணான நிலையை மேற்கொண்டிருக்கிறார். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள், ‘சிவத்தம்பி முன்னிலையில்தான் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டமே நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் சிவத்தம்பி திடீரென மாநாட்டை எதிர்க்கிறார். இந்த விடயத்தில் வரவேற்கத்தகுந்த அவருடைய மன மாற்றத்துக்கு காரணம் தெரியவில்லை.இந்த மாநாடு நடக்கவே கூடாது என்பது எங்கள் எண்ணம் அல்ல. ஆனால், தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷே சகோதரர்கள் உலக அரங்கில் தங்கள் போர்க்குற்றத்தை மறைத்துக்கொள்ள கேடயமாக கொழும்பில் இந்த மாநாடு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்’’ என விரிவாகப் பேசினார் எஸ்பொ.‘பேரழிவு ஆயுதங்களை தமிழனுக்கு எதிராக தூக்கிய ராஜபக்ஷேக்கள், இன்று தமிழனின் பேனாவையே தமிழனுக்கு எதிராக தூக்கத் துணிந்துவிட்டனர். கொழும்பின் கொழுப்பை அடக்க, இந்த மாநாட்டுக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்படுவது அவசியம்’ என்பதே மிகப் பெரும்பான்மையான தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

1 comment:

  1. முதலில் சினிமாக் கவர்ச்சி
    இப்போது எழுத்து
    இன்னும் எத்தனை எத்தனி ஆயுதங்களை எடுக்கப்போகிறார்களோ?

    ReplyDelete