Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க சட்டசபையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமச்சீர் கல்வி சட்டத் திருத்தத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதன் மீது 6 நாட்கள் வக்கீல்கள் வாதம் நடந்தது. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துகிறோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெற்றோர் தரப்பில் வாதாடிய வக்கீல்கள், அரசியல் ரீதியில் சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பஞ்சால், தீபக்வர்மா, சவுகான் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. காலை 10.34 மணிக்கு நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பு விவரம் வருமாறு:-
25 காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் அப்பீல் மனு உள்பட எல்லா மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும்.
10 நாட்களில் சமச்சீர் கல்வி அமல்படுத் தப்பட வேண்டும்.
சமச்சீர் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழ் நாட்டில் இந்த ஆண்டே ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
நன்றி - மாலை மலர் நாளிதழ் .

No comments:

Post a Comment